சென்னை
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து
14-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் 3-ம் தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையை நடத்துவதற்கு ஏற்ற வகையில் கலைவாணர் அரங்கம் தயார்படுத்தப்பட்டு வருகிறது. 14, 15 மற்றும் 16 ஆகிய 3 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.இதையடுத்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அவர்களது இல்லத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சட்டமன்றத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதிப்பு அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சட்டமன்ற நிகழ்வுகள் தொடர்பாக அதிகாரிகள், செய்தியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது